நாமக்கல்லில், மடிக்கணினி திருடிய 3 பேர் கைது


நாமக்கல்லில், மடிக்கணினி திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 14 Aug 2019 10:13 PM GMT)

நாமக்கல்லில் மடிக்கணினி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் இலுப்புலி அருகே உள்ள மூலப்பாளையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் கடந்த மாதம் 16-ந் தேதி சேலம் செல்ல அரசு பஸ்சில் ஏறினார். அப்போது பையில் வைத்திருந்த மடிக்கணினி திருட்டு போனது.

இதேபோல் மணச்சநல்லூர் கல்பாளையத்தை சேர்ந்த ஜியாவுதின், திருச்சி ராமலிங்கா நகரை சேர்ந்த மெர்வின் ஆண்டனி, சமயபுரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த கோபிநாத் ஆகியோரும் நாமக்கல்லுக்கு பஸ்சில் வந்தபோது மடிக்கணினி திருட்டு போனதாக நாமக்கல் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் மடிக்கணினி திருடும் நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த சபரீஸ்வரன் என்பவர் திருச்சியில் இருந்து சேலம் செல்ல அரசு பஸ்சில் நாமக்கல் வந்தபோது ‘லக்கேஜ் கேரியரில்’ வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி திருட்டு போனது. இதையடுத்து நாமக்கல் பஸ் நிலையத்தில் சந்தேக நபர்களை போலீசார் கண்காணித்த போது மடிக்கணினியுடன் நின்று கொண்டு இருந்த திருச்சி ராம்ஜிநகர் கண்ணன் (வயது44), முத்துக்குமரன் (41), சண்முகம் (43) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையின் போது அவர்கள் மடிக்கணினிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து திருட்டு போன 5 மடிக்கணினிகளை மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான 3 பேரிடம் இருந்து தர்மபுரி பகுதியில் திருட்டு போன மடிக்கணினி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார். மேலும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது விலை மதிப்புள்ள பொருட்களை லக்கேஜ் கேரியர்களில் வைத்து பயணம் செய்யாமல், உடன் வைத்து பயணம் செய்யுமாறும், ஏதேனும் பொருட்கள் வாங்க வழியில் இறங்கும்போது உடைமைகளை கையில் வைத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

Next Story