சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 14 Aug 2019 10:50 PM GMT (Updated: 14 Aug 2019 10:50 PM GMT)

சுதந்திர தின விழாவையொட்டி தூத்துக்குடியில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி காலை 9.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதே போன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், மாநகராட்சி, கோர்ட்டு உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஷ் பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மயிலேறும்பெருமாள், சக்திவேல், நங்கையர்மூர்த்தி, காந்திமதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story