பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திரதின விழா போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை


பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திரதின விழா போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 14 Aug 2019 11:36 PM GMT (Updated: 14 Aug 2019 11:36 PM GMT)

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

நெல்லை,

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதில் கலெக்டர் ஷில்பா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் குடும்பத்தினரை கவுரவிக்கிறார். அரசு துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் பயனாளிகளுக்கு வழங்குகிறார். சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்தவிழாவையொட்டி கடந்த சில நாட்களாக போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று கலெக்டர் கொடியேற்றுவது போலவும், போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்துவது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் வழக்கமாக கலெக்டருக்கு பதிலாக வேறு ஒரு அலுவலரை கொண்டு ஒத்திகை பார்ப்பார்கள். ஆனால் நேற்று கலெக்டர் ஷில்பா நேரடியாக சென்று கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஒத்திகை பார்த்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story