மக்கள் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு


மக்கள் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 9:37 PM GMT)

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.

தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த குருக்குப்பட்டி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 2019-ம் ஆண்டிற்கான ஊராட்சிகளில் ஜனவரி முதல் ஜூலை முடிய உள்ள மாதங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டு, திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

மேலும், திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் அறிந்து திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கிராமநலன் கருதி கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சுய உதவிக்குழுக்கள் கூட்டமைப்பின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து நீர்வளம் பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பினை முக்கிய நோக்கமாக கொண்டு மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வரும் ஜல்சக்தி இயக்கத்தினை பொதுமக்கள் அனைவரின் பங்கேற்போடு மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முன்னதாக பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திகளை தடைசெய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், குருக்குப்பட்டி ஊராட்சி, பவளத்தானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு விலையில்லா வண்ண சீருடைகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.5,312 முதல் தவணை மானியத்தையும் மாவட்ட கலெக்டர் ராமன் வழங்கினார். மேலும், அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் கோபிநாத், வேளாண்மை இணை இயக்குனர் கமலா, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story