தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி


தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 16 Aug 2019 11:00 PM GMT (Updated: 16 Aug 2019 7:18 PM GMT)

தஞ்சை அருகே கோவில் விழாவில் பங்கேற்று திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று கிடாவெட்டு திருவிழா நடந்தது. நான்கு குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த விழாவை நடத்தினர். இதில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள், நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலகம் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருடைய மகன் கபிலன்(வயது 25). என்ஜினீயரான இவருக்கும் கிடாவெட்டு திருவிழாவில் பங்கேற்க அழைப்பு வந்ததால் தனது நண்பர்கள் 7 பேருடன் மன்னார்குடியில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு ஆர்சுத்திப்பட்டுக்கு வந்தார்.

அவர்கள் வந்த காரை மன்னார்குடி புதிய வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் பிரகதீஸ்வரன்(26) என்பவர் ஓட்டி வந்தார். கோவிலுக்கு வந்த அனைவரும் மதியம் நடைபெற்ற விருந்தில் பங்கேற்றனர். விருந்து முடிந்தவுடன் 8 பேரும் மீண்டும் காரில் ஏறி மன்னார்குடி நோக்கி சென்றனர். சடையார்கோவில்-சாலியமங்கலம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. சின்னபுளிக்குடிகாடு கிராமம் அருகே வளைவில் வேகமாக கார் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற செடி, கொடிகள் மீது கார் ஏறி சென்றது. காரை நிறுத்துவதற்கு டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் கண் இமைக்கும் நேரத்தில் சாலையோர பள்ளத்தில் நின்ற பனை மரத்தின் மீது கார் மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுக்குள் சிக்கி, சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டு இருந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஓடி வந்தனர். கார் விபத்தில் சிக்கிய தகவல் பரவியதால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் அங்கு திரண்டு வந்தனர்.

பள்ளத்தில் நின்ற பனைமரத்தில் மோதி நின்றதால் காரை மேலே தூக்கினால்தான், காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பவர்களை வெளியே மீட்கக்கூடிய நிலை இருந்தது. இதனையடுத்து கிராம மக்கள் விரைவாக செயல்பட்டு பொக்லின் எந்திரத்தை வரவழைத்தனர். பின்னர் இரும்பு கம்பிகளை காரில் கட்டி, பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் இருந்து காரை சாலைக்கு கொண்டு வந்தனர். அப்போது கார் டிரைவர் பிரகதீஸ்வரனும், கபிலனும் சீட்டில் இருந்தபடியே உயிரிழந்திருந்தனர்.

பின்னர் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மன்னார்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ராஜா(18), கருணாநிதி மகன் அருளரசன்(33), மகேந்திரவர்மன் மகன் ராஜவர்மன்(29), எடமேலையூர் தெற்கு கண்டியர் தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் விவேக்(28), மதுரையை சேர்ந்த மோகன்(20) மற்றும் ஒருவர் என 6 பேரை மீட்டனர். பின்னர் இவர்கள் அனைவரையும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது மதுரையை சேர்ந்த மோகன் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்சில் இருந்து கீழே இறக்கி வைத்துவிட்டு மீதமுள்ள 5 பேரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, முத்துவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story