ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்


ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்
x
தினத்தந்தி 16 Aug 2019 11:30 PM GMT (Updated: 16 Aug 2019 8:22 PM GMT)

ரெயில்களில் பயணிகளிடம் சகஜமாக பேசி அவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, நகை, பணத்தை பறித்து வந்த வட மாநில கொள்ளையனை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடமாடியபோது அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சென்னை,

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் அமித்குமார் (வயது 29). இவர் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை சென்டிரலுக்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சென்டிரல் ரெயில்வே துணை சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் அமித்குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின் அமித்குமார் சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னைக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தபோது எனது அருகில் ஒருவர் உட்கார்ந்து, என்னிடம் பேச்சுக் கொடுத்தார். நானும் அந்த நபரிடம் பேச்சு கொடுத்தேன். இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். சாப்பிடுவதற்காக நான் உணவு வாங்கி வைத்திருந்தேன்.

அந்த உணவில் எனக்கு தெரியாமல் அந்த நபர் மயக்க மருந்து கலந்து விட்டார். நான் அதை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் கண் விழித்து பார்த்த போது எனது நகை மற்றும் பணம் மாயமாகி இருப்பது தெரியவந்தது என அதில் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சென்டிரல் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடமாடுவதை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்காள மாநிலம், ஹேக்லி மாவட்டத்தை சேர்ந்த சக்கர போர்தி (49) என்பதும், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளிடம் நன்றாக பேசி, அவர்களுக்கு தெரியாமல் உணவில் மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் மயங்கியதும் நகை, பணம், செல்போன்களை திருடி செல்வதை வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும் தான் திருடிய பொருட்களை ஹவுரா, மும்பை, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் விற்று, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சக்கர போர்தியிடம் இருந்து மயக்க மருந்து துகள்கள் அடங்கிய 9 குப்பிகள், 60 மயக்க மாத்திரைகளை கைப்பற்றி, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். தற்போது சக்கர போர்தி எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சக்கர போர்தி மீது நாக்பூர், ஹவுரா, விஜயவாடா ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story