விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மைசூரு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்-3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது


விபத்தில் சிக்கி  மூளைச்சாவு அடைந்த மைசூரு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்-3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது
x
தினத்தந்தி 16 Aug 2019 11:27 PM GMT (Updated: 16 Aug 2019 11:27 PM GMT)

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மைசூரு வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அந்த உடல் உறுப்புகளால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

மைசூரு,

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா சூளேகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் தர்மாஷா (வயது 28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடகு மாவட்டம் குஷால் நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது நடந்த சாலை விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார். இதைதொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதுகுறித்து டாக்டர்கள், தர்மாஷாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் தர்மாஷா மூளைச்சாவு அடைந்திருப்பதால், அவரது உடல்களை தானமாக கொடுத்தால், சிலருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சோகத்திலும் அவர்கள், தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

இதைதொடர்ந்து தர்மாஷாவின் இதயம், சிறுநீரகம், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து தானமாக எடுத்துக்கொண்டனர். அவைகள் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த உடல் உறுப்புகள் பெங்களூருவில் உள்ள 3 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவைப்பட்டது. இதையடுத்து அந்த உடல் உறுப்புகள் பெங்களூருவில் உள்ள 3 ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப மைசூரு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் போலீசாரின் உதவியை நாடினர். இதையடுத்து மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதியை போலீசார் ஏற்படுத்தி கொடுத்தனர். அதையடுத்து உடல் உறுப்புகள் இருந்த பெட்டி ஆம்புலன்சில் ஏற்றி பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் பெங்களூரு நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு இதயமும், பெங்களூரு கெங்கேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு நுரையீரலும், பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு சிறுநீரகமும் பொருத்தப்பட்டது.

உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட நோயாளிகள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தர்மாஷாவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story