திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது


திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 7:54 PM GMT)

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரெயிலடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன் விஜய் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான ஒரு பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணை விஜய் திருப்பூருக்கு அழைத்து சென்று அங்கு உல்லாசமாக இருந்துள்ளார். இதை தொடர்ந்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு தெட்சிணாமூர்த்தி இறந்து விட்டார். இதனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் விஜய் காலம் கடத்தி வந்துள்ளார்.

வாலிபர் கைது

இதனால் அந்த பெண் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 3 ஆண்டுகளாக விஜய் என்னிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்னைஅபிராமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.

Next Story