புதுக்கடை அருகே பரிதாபம் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை சாவு


புதுக்கடை அருகே பரிதாபம் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை சாவு
x
தினத்தந்தி 17 Aug 2019 10:45 PM GMT (Updated: 17 Aug 2019 8:46 PM GMT)

புதுக்கடை அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த தையல் ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

புதுக்கடை,

மார்த்தாண்டம் அருகே நல்லூர் கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சேகர், அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி ஷிபி (வயது 37). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஷிபி மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் தையல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் புதுக்கடையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மார்த்தாண்டம் செல்வதற்காக அரசு பஸ்சில் புறப்பட்டார். பஸ்சில் அமர இருக்கை கிடைக்காததால் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். அந்த பஸ் முஞ்சிறை அருகே ஒரு வளைவான பகுதியில் சென்ற போது, ஷிபி நிலைதடுமாறி ஓடும் பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அவரை பொதுமக்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பரிதாப சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி ஷிபி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் புதுக்கடை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story