நாமக்கல் அருகே 2 பெண்டாட்டிக்காரர் கிணற்றில் தவறி விழுந்து சாவு அழுகிய நிலையில் உடல் மீட்பு


நாமக்கல் அருகே 2 பெண்டாட்டிக்காரர் கிணற்றில் தவறி விழுந்து சாவு அழுகிய நிலையில் உடல் மீட்பு
x
தினத்தந்தி 17 Aug 2019 10:15 PM GMT (Updated: 17 Aug 2019 9:12 PM GMT)

நாமக்கல் அருகே 2 பெண்டாட்டிக்காரர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கொண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). ரிக் வண்டி தொழிலாளி. இவருக்கும் நித்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றுக்கொண்டு, விஜயகுமார் 2-வதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்ற விஜயகுமார் பின்னர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தை சேர்ந்த செல்வராணி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்து உள்ளே பார்த்தபோது விஜயகுமார் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

கிணற்றில் தவறி விழுந்தார்

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஜயகுமாரின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் குடிப்பழக்கம் உடைய விஜயகுமார் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story