குடிமராமத்து பணிக்கான விவசாய சங்கத்தை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


குடிமராமத்து பணிக்கான விவசாய சங்கத்தை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2019 10:45 PM GMT (Updated: 17 Aug 2019 10:39 PM GMT)

குடிமராமத்து பணிக்கான விவசாய சங்கத்தை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தமிழகத்தில் உள்ள கண்மாய் கள் மற்றும் நீர்நிலைகளில் தூர்வாரும் பணியை குடிமராமத்து முறையில் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஜூன் மாதம் பொதுப் பணித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 2019-20-ம் ஆண்டில் 6 ஆயிரத்து 829 நீர்நிலைகளில் சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப் படும் என கூறப்பட்டிருந்தது.

குடிமராமத்து பணிகளை அந்தந்த கிராமத்தில் பதிவு செய்த ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினருக்கு அளிக்காமல் புதிதாக தொடங்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினருக்கு ஒதுக்கி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் கள் எழுந்தன. இதையடுத்து, குடிமராமத்து பணிகளை புதிய விவசாய சங்கங்களுக்கு ஒதுக்குவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் குடிமராமத்து பணிகளை முடிக்க வேண்டியது அவசியம். இதில், பணிகளை மேற்கொள்வதில் ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாய சங்கங்களிடையே பிரச்சினை எழுந்துள்ளது. பணிகளை ஒதுக்குவதற்காக குலுக்கல் முறையில் நபர்களை தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. இதற்காக விவசாயிகளையும், ஆயக்கட்டுதாரர்களையும் அதிகமாக கொண்ட சங்கத்தை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளின் தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராமத்தின் பொது இடத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பை தண்டோரா மூலமும், சங்கங்களின் நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையிலும் தெரியப்படுத்த வேண்டும். குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள விரும்பும் 2 சங்கங்களுக்கு இடையே வாக்கு சீட்டுகளை வழங்கி தேர்தல் நடத்த வேண்டும்.

தேர்தலில் எந்த சங்கம் அதிக வாக்குகளை பெறுகிறதோ, அந்த விவசாய சங்கத்தினருக்கு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story