14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை காலி செய்தார், குமாரசாமி


14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை காலி செய்தார், குமாரசாமி
x
தினத்தந்தி 18 Aug 2019 12:21 AM GMT (Updated: 18 Aug 2019 12:21 AM GMT)

14 மாதங்களாக தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் அறையை குமாரசாமி காலி செய்துள்ளார். ஜே.பி.நகரில் உள்ள வீட்டுக்கு அவர் குடி பெயர்ந்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2018) நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்தார். இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைக்கலாம் என்றும், 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக நீங்களே (குமாரசாமி) இருக்கும்படியும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறி இருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் குமாரசாமி தங்கி இருந்தார். முதல்-மந்திரி பதவி தன்னை தேடி வந்ததால் நட்சத்திர ஓட்டலில் தான் தங்கி இருந்த அறையை மிகவும் ராசியானதாக குமாரசாமி நினைத்தார். இதன் காரணமாக முதல்-மந்திரி பதவி வகித்த 14 மாதங்களும் அந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள அறையை காலி செய்யாமல், அங்கேயே பெரும்பாலும் தங்கி இருந்தார்.

ஜே.பி.நகரில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்று வந்தாலும், பெரும்பாலும் ஓட்டலில் தான் அவர் தங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதன் காரணமாக நட்சத்திர ஓட்டலில் குமாரசாமி தங்கி இருப்பதாகவும், சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறினார்கள். அப்போது அரசு செலவில் நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை என்றும், தனது சொந்த செலவில் தங்கி இருப்பதாகவும் பா.ஜனதாவினருக்கு குமாரசாமி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்-மந்திரி பதவியை இழந்து விட்டதால் நட்சத்திர ஓட்டலில் உள்ள தன்னுடைய ராசியான அறையை குமாரசாமி காலி செய்துள்ளார். மேலும் ஜே.பி.நகரில் உள்ள தனது வீட்டுக்கு குமாரசாமி குடிபெயர்ந்துள்ளார். 

Next Story