துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி


துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
x
தினத்தந்தி 18 Aug 2019 11:15 PM GMT (Updated: 18 Aug 2019 6:42 PM GMT)

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

உப்பிலியபுரம்,

இவருடைய மனைவி எழிலரசி (50). இவர்களின் மகன் சதீஸ்குமாருக்கும் (30), திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலிய புரம் அருகே உள்ள எஸ்.என்.புதூரில் உள்ள சுசீலாவுக்கும் (24) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஸ்குமார் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் எஸ்.என்.புதூரில் கருப்புசாமி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சுசீலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் குணசீலனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சதீஸ்குமாரும், சுசீலாவும் முன்கூட்டியே எஸ்.என்.புதூருக்கு சென்றுவிட்டனர். கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று மதியம் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

சம்பந்தி வீட்டாரின் அழைப்பின் பேரில் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக குணசீலன், தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று காலை ஒரு சரக்கு வேனில் பேரூரில் இருந்து புறப்பட்டார். சரக்கு வேனில் டிரைவர் உள்பட 17 பேர் பயணம் செய்தனர். சரக்கு வேனை அதே ஊரை சேர்ந்த இளையராஜா (36) ஓட்டினார்.

சரக்கு வேனின் முன்பக்கம் இருக்கை மற்றும் பின் பகுதியில் குணசீலனின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். திரு விழாவுக்கு செல்லும் மகிழ்ச்சியில் சிறுவர், சிறுமிகள் உள்பட அனைவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் எரகுடி அருகே மதியம் 1.30 மணி அளவில் சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்குவேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கிணற்றில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என்று சத்தம் எழுப்பினர். அந்த நேரத்தில் எரகுடியில் இருந்து தா.பேட்டை செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.

இந்த விபத்தை கண்டதும் பஸ் டிரைவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக வண்டியை நிறுத்தினார். மேலும் பஸ்சில் இருந்தவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். உடனடியாக அவர்கள் அக்கம்பக்கத்தினருக்கும், உப்பிலியபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் போலீசார் மற்றும் தா.பேட்டை, உப்பிலியபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் தண்ணீர் அதிகம் இல்லாமல் சேறும், சகதியாக இருந்தது. மேலும் அதன் ஆழம் 100 அடியாக இருந்தது. இதனால் உயிருக்கு போராடியவர்களை மீட்க 6 தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறுகட்டி இறங்கினர். அப்போது, சம்பவ இடத்திலேயே குணசீலன்-எழிலரசி தம்பதி மற்றும் இவர்களின் உறவினர்களான ஞானசீலனின் மனைவி குமாரத்தி (52), தனபாலின் மனைவி கோமதி (40), முருகேசனின் மனைவி கயல்விழி (35), கயல்விழியின் மகள் சஞ்சனா (4), இளங்கோவனின் மகள் யமுனா (10), மகன் சரண் குமார் (4) ஆகிய 8 பேர் பலியானது தெரியவந்தது.

இதில் கோமதி மட்டும் எஸ்.என்.புதூர் அருகே உள்ள கட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் பேரூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் கிணற்றுக்குள் படுகாயத்துடன் டிரைவர் இளையராஜா உள்பட 9 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

படுகாயமடைந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு அவர்களது உடலில் தீயணைப்பு வீரர்கள் கயிறுகளை கட்டி விட்டனர். கிணற்றின் மேலே இருந்த தீயணைப்பு வீரர்கள் கயிறை பிடித்து இழுத்து காயமடைந்தவர்களை வெளியே கொண்டுவந்தனர். இதேபோல இறந்தவர்களின் உடல்களும் கயிறு கட்டி மேலே எடுக்கப்பட்டது.

சிறுவர், சிறுமிகளை மட்டும் தீயணைப்பு வீரர்கள் தங்களது முதுகில் கயிற்றால் கட்டி வைத்து மேலே தூக்கி வைத்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்டவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் எஸ்.சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, மீட்பு பணியை துரிதப்படுத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இதற்கிடையில் சரக்கு வேன் விபத்துக்குள்ளானது குறித்து தகவல் அறிந்ததும் இறந்த குணசீலனின் உறவினர்கள், பேரூர் மற்றும் எஸ்.என்.புதூரை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். குணசீலன் தம்பதியினரின் உடலை பார்த்து அவரது மகன் சதீஸ்குமார், மருமகள் சுசீலா மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

ஒவ்வொருவரின் உடலும் மேலே தூக்கி வரப்பட்ட போது அங்கிருந்தவர்கள் கண்ணீர் வடித்தனர். 8 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வேன் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவுக்கு சென்ற போது சரக்கு வேன் கிணற்றுக்குள் பாய்ந்து 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story