திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரம்


திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:30 PM GMT (Updated: 18 Aug 2019 7:13 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன்.

ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டமான ஆழி்த்தேரின் அழகிய தோற்றம் அனைவரும் காண முடியாமல் விடுகிறது. இதனையடுத்து ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் பைபர் கண்ணாடி கூண்டு அமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி பைபர் கண்ணாடி கூண்டு அமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கூரை அமைக்கும் பணி

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இரும்பு தூண்களுடன் ஷெட் அமைக்கப்பட்டு பைபர் கண்ணாடி பொருத்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் ஆழித்தேரோட்ட விழாவிற்காக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, தேர் இரும்பு ஷெட் பிரிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதனையடுத்து கமலாம்பாள் ஆடிப்பூர தேரோட்டத்தின் வசதிக்காக ஆழித்தேர் கூரை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டிற்கான இரும்பு ஷெட்டை கிரேன் உதவியுடன் அமைக்கும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. பிரதான சாலை ஆழித்தேர் உள்ளதால் பாதுகாப்பு வசதிகளை கருத்தி்ல் கொண்டு கண்ணாடி கூண்டிற்கான வடிவமைப்பினை சரிவர திட்டமிடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story