பணியின்போது தகராறில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி உடுமலை அரசு மருத்துவமனை செவிலியர்கள் தர்ணா


பணியின்போது தகராறில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி உடுமலை அரசு மருத்துவமனை செவிலியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 7:42 PM GMT)

உடுமலை அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் தகராறில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை,

உடுமலை யு.எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. பிரசவத்திற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்து இருந்தார். இவருக்கு குழந்தை பிறந்த பிறகு மேல் சிகிச்சைக்காக பெண்கள் வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பார்வையாளர் நேரம் முடிந்தபிறகு வேளாங்கண்ணியை பார்ப்பதற்காக அவரது அண்ணன் வினோத்குமார் சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஆரிபா பானு, பார்வையாளர் நேரம் முடிந்து விட்டதால் இப்போது பெண்கள் வார்டினுள் செல்ல கூடாது என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த வினோத் குமார் செவிலியர் ஆரிபா பானுவை தகாத வார்த்தைகளால் திட்டி, பணியை செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியிடம் செவிலியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பணி நேரம் முடிந்த பிறகு செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சுமார் 40 பேர் நேற்று காலை சுமார் 8 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அவர்கள் செவிலியர் ஆரிபா பானுவை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் மற்ற செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவமனையில் பணிக்கு சென்றிருந்தனர். அதனால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல் சிகிச்சை நடந்தன. இந்த போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் செவிலியரிடம் தகராறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன் உடுமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சையது இசாக் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை (வயது 24) கைது செய்தார். இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாலை 4 மணிக்கு கலைந்து சென்றனர்.

Next Story