மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு: அதிகாரிகள் கண்டித்ததால் அவமானம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தற்கொலை


மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு: அதிகாரிகள் கண்டித்ததால் அவமானம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 7:49 PM GMT)

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டித்ததால் அவமானம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை அரும்பாக்கம் திருக்குமரன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவர், தனது வீட்டில் உள்ள குடிநீர் இணைப்பில், குடிநீர் வாரியத்துக்கு தெரியாமல் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த குடிநீர் வாரிய அதிகாரிகள், கடந்த 14-ந்தேதி வேல்முருகன் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்தனர். அத்துடன் அவரது வீட்டுக்கான குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். இந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்த்தனர்.

இதனால் மனம் உடைந்த வேல்முருகன், அவமானம் தாங்காமல் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த சூளைமேடு போலீசார் வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலை பல்லவன் நகரை சேர்ந்தவர் மதன்ராஜ் (30). இவர், சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதன்ராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த திருவல்லிக்கேணி போலீசார், மதன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதன்ராசுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்று, அவரது உறவினர்கள் காப்பாற்றி விட்டனர். தற்போது அவர், மீண்டும் கஞ்சா போதையில் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் திருமால் நகர் 22-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (33). பெயிண்டர். இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனந்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஆனந்த் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை பவானி கண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கி விட்டனர். மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த ஆனந்த், நள்ளிரவில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று காலை எழுந்து பார்த்த பவானி, தனது கணவர் ஆனந்த் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story