தக்கலை அருகே தகராறை விலக்கி விட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து ரவுடி கைது


தக்கலை அருகே தகராறை விலக்கி விட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து ரவுடி கைது
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 9:33 PM GMT)

தக்கலை அருகே தகராறை விலக்கி விட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே மஞ்சனவிளையை சேர்ந்தவர் மனோகரகுமார் (வயது 49). இவர் தக்கலை ஒன்றிய பா.ஜ.க. தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42), புகைப்பட கலைஞர். ராதாகிருஷ்ணன் மீது மனைவியை கொன்ற வழக்கு, போலீஸ்காரரை வெட்டிய வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அவர் ரவுடி பட்டியலில் உள்ளார். இவருடைய சொந்த ஊர் குளச்சல் பனைவிளை.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணனுக்கும், மஞ்சனவிளையை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக நேற்று காலையில் தகராறு ஏற்பட்டது. இதனை கேள்விபட்ட மனோகரகுமார் விரைந்து வந்து தகராறை விலக்கி விட்டார். இதில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் திடீரென கத்தியை எடுத்து மனோகரகுமாரை குத்தி விட்டார்.

ரவுடி கைது

படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக களியங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.பா.ஜ.க. நிர்வாகியை கத்தியால் குத்தியதாக ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story