காரியாபட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


காரியாபட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:00 PM GMT (Updated: 19 Aug 2019 5:26 PM GMT)

காரியாபட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அயன்ரெட்டியபட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் மல்லாங்கிணறு பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கிராம மக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காரியாபட்டி-விருதுநகர் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காரியாபட்டி தாசில்தார் ராம்சுந்தர், அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், மல்லாங்கிணறு சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 2 தினங்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story