கல்லல் அருகே மின்சாரம் தாக்கி மாமியார்- மருமகள் பலி; உயிர் பிழைத்த குழந்தைகள்


கல்லல் அருகே மின்சாரம் தாக்கி மாமியார்- மருமகள் பலி; உயிர் பிழைத்த குழந்தைகள்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:15 PM GMT (Updated: 19 Aug 2019 7:21 PM GMT)

கல்லல் அருகே அறுந்து கிடந்த மின் வயரில் சிக்கி மாமியார் மற்றும் மருமகள் பலியாயினர். இந்த சம்பவத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டதால் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

கல்லல்,

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள சொக்கநாதபுரம் முத்துபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னையா ஆசாரி. இவர் தனது மனைவி தெய்வானை (வயது 58), மகன் லெட்சுமணன், மருமகள் சரண்யா (25), மற்றும் பேரன் கார்த்திக் (2), எட்டு மாத குழந்தை பூஜா ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் லெட்சுமணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை இவர்களின் வீட்டின் முன்பு மின்சார வயர் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் தெய்வானை அதனை மிதித்து விட்டார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கவனித்த அவரது மருமகள் சரண்யா உடனடியாக தனது மாமியாரை காப்பாற்ற முயன்று அவரை பிடித்தார். அப்போது சரண்யாவின் இடுப்பில் 8 மாத குழந்தை பூஜாவும், கையில் மகன் கார்த்திக்கும் இருந்துள்ளனர்.

இதில் சரண்யா மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட சரண்யா இடுப்பில் இருந்த தனது குழந்தையை தூக்கி வீசினார். கையை பிடித்த நிலையில் இருந்த தனது மகனை தள்ளி விட்டார். இதையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சரண்யாவும், அவரது மாமியார் தெய்வானையும் உயரிழந்தனர்.

தனது உயிர் போகும் நிலையிலும் கூட தனது சாமர்த்தியமான செயல்பாட்டால் தனது குழந்தைகளை காப்பாற்றிய சரண்யாவின் செயலை அந்த பகுதி மக்கள் மிகவும் சோகத்துடன் பகிர்ந்து கொண்டனர். இது குறித்து மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரண்யாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து தனது மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு சமீபத்தில் தான் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story