உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:45 PM GMT (Updated: 19 Aug 2019 7:38 PM GMT)

உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரியலூர் மாவட்ட புகைப்படக்காரர் மற்றும் வீடியோ கிராப்பர்கள் நலச்சங்கம் சார்பில் உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் போது புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர்களுக்கு ஹெல்மெட் வழங்கி கலெக்டர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் புகைப்படத்தை ஊக்குவிப்பதற்காகவும், உலகெங்கிலும் உள்ள புகைப்பட கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு புகைப்படத்தை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது.

உலக புகைப்பட தினம் புகைப்பட சகோதரத்துவத்தால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புகைப்பட கலைஞர்கள் தங்களது உள்ளடுகளை பல இணையத்தளங்களில் சமர்ப்பித்து சிறப்புகளை வெளிக் கொண்டு வருகின்றனர்.

கண்டிப்பாக அணிய வேண்டும்

கட்டிடக்கலை, வனவிலங்கு, படைப்பாற்றல், இயற்கை, பயணம், தெரு புகைப்படம் எடுத்தல் போன்ற வகைகளில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படத்தை பதிவு செய்து சமர்ப்பிக்க உலக புகைப்பட அமைப்பு உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களை அழைக்கிறது. அவற்றில் சிறந்த புகைப் படங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர்கள் நலச்சங்கம் சார்பில் 75 புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர் களுக்கு ஊர் காவல் படை மண்டல தளபதி சார்பில் ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களிடம் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story