கூடலூரில் பயங்கரம், மருமகனை குத்திக் கொன்ற தொழிலாளி கைது - மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்


கூடலூரில் பயங்கரம், மருமகனை குத்திக் கொன்ற தொழிலாளி கைது - மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:30 PM GMT (Updated: 19 Aug 2019 10:28 PM GMT)

கூடலூரில் மருமகனை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

தேனி மாவட்டம், கூடலூர் மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 42). இவருடைய மனைவி மஞ்சு (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ரங்கநாதன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு மஞ்சு தனது குழந்தைகளுடன் ராயப்பன்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ரங்கநாதன் கூடலூரில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரங்கநாதன் ராயப்பன்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு சமரசம் பேசி மனைவி மற்றும் குழந்தைகளை குடும்பம் நடத்த கூடலூருக்கு அழைத்து வந்தார். அங்கு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மஞ்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூடலூர் வடக்கு போலீசில் கூலித்தொழிலாளியான ரவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் தற்கொலை செய்து கொண்டதால் ரங்கநாதன் மீது ரவி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ரவி கூடலூருக்கு வந்தார். அங்கு மெயின் பஜார் வீதியில் வீட்டு முன்பு ரங்கநாதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை அருகே வரும்படி ரவி அழைத்தார். உடனே அங்கு வந்த ரங்கநாதனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவி சரமாரியாக குத்தினார். இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து அவர் விழுந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கநாதன் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே தப்பியோட முயன்ற ரவியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மருமகனை மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story