தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு 3 பேர் படுகாயம்


தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 6:52 PM GMT)

தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாலியமங்கலம்,

தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலம் மன்னன் காலனி பகுதியை சேர்ந்த சிவசாமி மகன் விஜி (வயது34). டிரைவர். இவருடைய உறவினர் மன்னன் காலனியை சேர்ந்த சரவணன் (31). நீடாமங்கலம் அருகே உள்ள ராயபுரத்தை சேர்ந்தவர் தனபால் (35). நார்த்தங்குடியை சேர்ந்தவர் மகேந்திரன் (40). இவர்கள் 4 பேரும் நேற்று சாலியமங்கலம் மன்னன்காலனி பகுதியில் உள்ள ஒரு வயலில் விதை நெல் தெளிப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் விஜி எந்திரம் மூலமாக வயலை உழவு செய்தார்.

வேலை முடிந்ததும் மதியம் 4 பேரும் சாப்பிட செல்வதற்காக அந்த பகுதியில் சாலியமங்கலம்-பாபநாசம் சாலை ஓரம் உள்ள வாய்க்காலில் கை கழுவி கொண்டிருந்தனர். அப்போது சாலியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாய்க்காலில் நின்று கொண்டிருந்த விஜி உள்பட 4 பேரும் மினி லாரிக்கு அடியில் சிக்கி கொண்டனர். படுகாயம் அடைந்த விஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணன், தனபால், மகேந்திரன் ஆகிய 3 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் மீட்டு தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story