கண்மாய்களில் மண் அள்ளுவதில் விதிமீறலை கண்காணிக்க குழு உள்ளதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


கண்மாய்களில் மண் அள்ளுவதில் விதிமீறலை கண்காணிக்க குழு உள்ளதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 20 Aug 2019 10:15 PM GMT (Updated: 20 Aug 2019 7:44 PM GMT)

“கண்மாய்களில் மண் அள்ளுவதில் விதிமீறலை கண்காணிக்க மேற்பார்வை குழு உள்ளதா?” மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலையூர், தென்கால், விளாச்சேரி, மண்டேலாநகர், பெருங்குடி, அயன்பாப்பாக்குடி கண்மாய்கள் உள்பட மேலும் சில கண்மாய்களில் சவடு மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அனுமதியை மீறி, சட்டவிரோதமாக இந்த கண்மாய்களில் மண் அள்ளப்படுகிறது. இதேபோல் டிராக்டர் பயன்படுத்துவதற்கு பதிலாக தினமும் குறைந்தது 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளப்படுகிறது.

இதுதவிர அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 8 அடி முதல் 10 அடி வரை ஆழமாக தோண்டி மண் அள்ளப்பட்டு கண்மாய்கள் சேதப்படுத்தப்படுகின்றன. கண்மாய் கரை பலப்படுத்துதல், விவசாய நிலத்திற்கு பயன்படுத்துதல் என்ற சட்டரீதியான முறையில் மண்ணை பயன் படுத்தாமல் தனியார் குத்தகைதாரர்களுக்கு விற்கப்பட்டு, சாலை அகலப்படுத்துதல் மற்றும் ரெயில்வே பாதை அமைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த மண்ணை பயன்படுத்துகிறார்கள்.

எனவே கண்மாய்களை ஆய்வு செய்து சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்கவும், மண் எடுக்க அனுமதித்ததை ரத்து செய்யவும் கோரி அதிகாரிகளுக்கு கடந்த 9-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே எனது மனு அடிப்படையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்மாய்களில் சட்டவிரோதமாக குவாரி போல் அமைத்து மண் அள்ளுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், சிறு கனிமவள சட்டம் 1959-ன்படி இந்த கண்மாய்களை தூர்வாரவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “கண்மாய்களில் மண் அள்ள விதிகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண் அள்ளுவதை உரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “கண்மாய்களில் மண் அள்ளுவதில் விதிமீறலை கண்காணிக்க மேற்பார்வை குழு உள்ளதா? நீங்கள் கூறியது போல கண்காணிப்பு குழு இருந்தால் இந்த பிரச்சினை குறித்து பலர் கோர்ட்டுக்கு வர வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினர்.

முடிவில், கண்மாய்களில் சவடு மண் அள்ளுவதற்கு உரிமம் கொடுப்பதற்கு முன்பாக, மத்திய அரசின் கனிமவளத்துறை விதிமுறைப்படி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், திருமங்கலம் வருவாய் அதிகாரி உள்ளிட்டவர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story