போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை


போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை
x
தினத்தந்தி 22 Aug 2019 12:15 AM GMT (Updated: 21 Aug 2019 7:02 PM GMT)

போரூர் அருகே சுடுகாட்டில், ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல், பெரிய கொளுத்துவான்சேரியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 21). ரவுடியான இவர், போரூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது கொலை வழக்கும் உள்ளது. இவருடைய மனைவி வினிதா.

நேற்று முன்தினம் மதியம் வசந்தகுமார், வீட்டில் இருந்து தனது நண்பர்களுடன் வெளியே சென்றார். ஆனால் நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

இந்தநிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டில், முட்புதர்களுக்கு நடுவில் வசந்தகுமார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், கொலையான வசந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ‘டைசன்’ கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நண்பர்களுடன் சென்ற வசந்தகுமார், மது அருந்தியபோது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அவரை கழுத்தை அறுத்து கொன்றனரா? அல்லது கடந்த சில மாதங்களுக்கு முன்பு போரூர் ஏரியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதான வசந்தகுமார் சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். எனவே இதற்கு பழிக்குப்பழியாக யாராவது கொன்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story