ஊழல் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


ஊழல் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 22 Aug 2019 12:00 AM GMT (Updated: 21 Aug 2019 7:14 PM GMT)

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமம் அபுசாலி சாலையில் கடந்த சில மாதங்களாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் மூன்றாம் கட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் சிக்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், தே.மு.தி.க. சார்பில் இந்த சாலையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் பங்கேற்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சாலை சரியில்லாததால் குப்பை அள்ளும் லாரிகள் வரவில்லை. இதனால் குப்பைகள் அதிகம் சேர்ந்து துர்நாற்றத்தோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் மழையும் பெய்ததால் சாலை இன்னும் மோசமாகி சேறும், சகதியுமாக உள்ளது. மக்கள் பணியில் முதலில் இறங்கி பணிகளை செய்வது தே.மு.தி.க. என்பதால் இந்த பகுதியை சீரமைத்து வருகிறோம்.

இதை அரசுக்கு எதிராகவோ, போலீசாருக்கு எதிராகவோ நாங்கள் செய்யவில்லை. மக்கள் பணியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். விரைவில் இந்த பகுதியில் தார்சாலை அமைக்க தமிழக அரசுக்கு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் அதிகாரிகள்தான் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, சுகாதாரமான தமிழ்நாட்டை எங்கள் கூட்டணி கொண்டு வரும். உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் போனதற்கு காரணம் தி.மு.க. வழக்கு போட்டதுதான்.

டாஸ்மாக்கை முதலில் கொண்டு வந்தது தி.மு.க.தான். அதைத்தான் அ.தி.மு.க. தொடர்ந்து செயல்படுத்தியது. டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்திலும் அப்படிதான். டாஸ்மாக் கடைகளுக்கு மது வகைகள் வினியோகம் செய்யும் முதலாளிகள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான்.

பெட்ரோல், டீசல், தங்கம் மற்றும் பால் விலை உயர்ந்துள்ளது. பால் விலை உயர்வு பால் உற்பத்தியாளர்களுக்கு நாம் செய்யும் உதவி என நினைத்து அனுசரித்து உங்கள் பட்ஜெட்டை சரிசெய்து கொள்ள வேண்டும்.

ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்துள்ளது. உப்பு தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். ஊழல் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவித்து தான் தீர வேண்டும். அது சாதாரண ஆளாக இருந்தாலும் சரி, இந்த நாட்டு பிரதமராக இருந்தாலும் சரி. மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தாரா? இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தே.மு.தி.க. தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story