வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Aug 2019 10:45 PM GMT (Updated: 21 Aug 2019 8:23 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). இவர் சென்னையில் சொந்தமாக கார் ஓட்டி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகனும், 2 மகளும் உள்ளனர். அவர்களும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

ராஜ்குமாருக்கு போதிய வருமானம் இல்லாததால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜ்குமார் தனது மனைவியிடம் சொல்லாமல் சென்னையில் இருந்து வள்ளியூருக்கு வந்துள்ளார். வள்ளியூக்கு வந்து தனது தந்தை வீட்டிற்கு செல்லாமல் வள்ளியூர் பைபாஸ் சாலையின் அருகே நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜ்குமார் நேற்று இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானூர் அருகே உள்ள மருதப்பபுரத்தை சேர்ந்தவர் சின்னபட்டத்தேவர் (76) விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த சின்னபட்டத்தேவர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னபட்டத்தேவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஷார் அகமது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான்குளம் பெரியசாமிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி திருமலையம்மாள் (68). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திருமலையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story