துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் அதிகாரி அறிவுறுத்தல்


துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 5:06 PM GMT)

துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அதிகாரி அறிவுறுத்தினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த முன்னிலை வகித்தார். தேசிய துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு ஆணையரக உறுப்பினா ஜெகதீஷ் ஹெராணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களின் விவரங்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சலுகைகள், பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவப்பரிசோதனை விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவ பரிசோதனை

துப்புரவு பணியாளர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவசியம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விபத்துகள் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே பணி காலங்களில் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் உபயோகிக்க வேண்டும். சொந்த வீடு கட்டுவதற்கும், அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் வழிவகை செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர அலுவலர்கள் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருவாரூர் புதிய பஸ் நிலையம், கீழ வீதி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் சுகாதாரப்பணிகளுக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டோர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மருத்துவப்பரிசோதனைகள், பணி பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

துப்புரவு தொழிலில் மனித உழைப்பை தவிர்த்து எந்திரங்களை அதிகப்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. அதற்காக எந்திரங்களை வாங்குவதற்கு மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவு பணியில் முழுவதுமாக எந்திர செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களை பணி நிரந்தரம் செய்ய இந்த ஆணையமானது தமிழக அரசுக்கு வழிகாட்டுதல்களை செய்யும். 2022-ம் ஆண்டுக்குள் துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, சொந்த வீடு, சிறந்த கல்வி, சிறந்த சுகாதாரம் ஆகியவற்றை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் துப்புரவு தொழிலாளர்களில் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான வங்கி கடன்கள் பெற்று தருவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன இதுதொடர்்பாக துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒரு மாதத்திற்குள் நடத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story