1883-ம் ஆண்டு கட்டப்பட்ட ராணீஸ் டவர், ரூ.4 கோடியில் சீரமைப்பு சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகிறது


1883-ம் ஆண்டு கட்டப்பட்ட ராணீஸ் டவர், ரூ.4 கோடியில் சீரமைப்பு சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 7:02 PM GMT)

தஞ்சையில் 1883-ம் ஆண்டு கட்டப்பட்டு சிதிலமடைந்த ராணீஸ்டவர் ரூ.4 கோடியில் சீரமைக்கப்படுகிறது. டவரை சுற்றி நடைபாதை அமைக்கப்படுகிறது.

தஞ்சாவூர்,

மிகவும் பழமை வாய்ந்த தஞ்சை நகரம் 36.33 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. பெரியகோவில், அரண்மனை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு சின்னம் ராணீஸ் டவர் என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தஞ்சை ராசாமிராசுதார் மருத்துவமனையின் ஒரு பகுதி இடத்தில் 1883-ம் ஆண்டு ராணீஸ் டவர் கட்டப்பட்டது. இதை கட்டுவதற்கு மராட்டிய ராணி இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

விக்டோரியா மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுகூரும் விதமாக இந்த ராணீஸ் டவர் அருகே வைரவிழா நினைவு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார வளைவு சாலை விரிவாக்கத்திக்காக 1995-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடந்த போது அகற்றப்பட்டது.

130 அடி உயரம் கொண்ட இந்த டவர் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்புக்கலவையால் கட்டப்பட்டுள்ளது. செங்கலின் மேல் சிமெண்டு பூச்சு இல்லாமல் மிகுந்த கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் இருந்து 20 அடி உயரம் வரை கட்டிடம் சதுரவடிவில் உள்ளது. இதில் 4 புறமும் வாசல்கள் உண்டு. இதன் மேல் மணிக்கூண்டின் பிரதான கட்டிடம் 60 அடிக்கு மேல் அறுகோண வடிவிலும், அதற்கு மேல் சதுரவடிவிலும் உள்ளது. அதன்மேல் உள்ள கோபுரம் தஞ்சை பெரியகோவில் விமானத்தில் உள்ளது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் 100 படிகளுக்கு மேல் உள்ளது.

இதில் அழகிய மரவேலைப்பாடுகளுடன் பளிங்கு கற்களுக்கு மத்தியில் கெடிகாரமும் உள்ளது. இந்த கெடிகாரம் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் இந்த கெடிகாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மணி ஒலிக்கும். ஆனால் இன்று இந்த கெடிகாரம் செயல்படாமல் உள்ளது.

1914-ம் ஆண்டு முதல் 1919-ம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப்போரில் தஞ்சையில் இருந்து 61 பேர் கலந்து கொண்டனர். அதில் 4 பேர் மரணம் அடைந்தனர் என்ற செய்தியை தாங்கிய பளிங்கு கல்லும் டவரில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த டவரை சுற்றிலும் பூங்காவும் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு ராணி பூங்கா என்று பெயர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வானொலிப்பெட்டி இருந்தது. பல வீடுகளில் வானொலி வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் மாலை நேரங்களில் வானொலி கேட்பதற்காக இந்த பூங்காவில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். தற்போதும் இந்த பூங்காவை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த பூங்காவில் மாநகராட்சி மண்டல அலுவலகம், வரிவசூல் அலுவலகம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வந்த போக்குவரத்து போலீஸ் அலுவலகம் தற்போது கீழவாசல் போலீஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி சின்னா, பின்னமாக காட்சி அளிக்கிறது. பூங்காவில் இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது. மின் விளக்குகள் இன்றி, கம்பங்கள் மட்டும் காட்சி அளிக்கிறது. கழிவுநீர் வாய்க்காலும் உடைந்து காணப்படுகிறது. மேலும் ராணீஸ்டவரின் கீழ்தளத்தில் உள்ள அறைகளும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

தற்போது தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு ரூ.904 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பூங்கா மற்றும் அதில் உள்ள ராணீஸ் டவர் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ரூ.4 கோடியில் ராணீஸ் டவர் மற்றும் பூங்கா சீரமைக்கப்படுகிறது. மேலும் டவரில் உள்ள கெடிகாரம் மற்றும் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, டவரை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதில் மழைநீர் சேகரிப்பு வசதி, பசுமையாக மாற்றும் வகையில் செடி, மரங்கள் நடுவது, சுற்றுச்சுவர் அமைப்பது, இருக்கைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்”என்றனர்.

Next Story