பள்ளி வேன் மோதி, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மினிபஸ் ஏறி சாவு


பள்ளி வேன் மோதி, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மினிபஸ் ஏறி சாவு
x
தினத்தந்தி 23 Aug 2019 4:30 AM IST (Updated: 23 Aug 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த மினி பஸ் ஒரு வாலிபர் மீது ஏறியதில் அவர் இறந்தார். மற்றொரு வாலிபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்துள்ள ஆனைமலையன்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுருளிராஜ் மகன் நாகராஜ் (வயது 22). இதே பகுதியில் வசிக்கும் ஜக்கையன் மகன் சூர்யா (22). நண்பர்களான இவர்கள் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடி வந்தனர். நேற்று மாலை இவர் கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கம்பம் சென்றனர்.

பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார்சைக்கிளை சூர்யா ஓட்டி வந்தார். வழியில் கம்பத்தை அடுத்த காமயகவுண்டன்பட்டியில் முல்லைப்பெரியாற்று பாலம் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் 2 பேரும் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி நோக்கி வந்த மினி பஸ் சூர்யா மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே சூர்யா பலியானார். படுகாயமடைந்த நாகராஜை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராயப்பன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர் பிரதாப் ராஜ்குமார்(32), மினி பஸ் டிரைவர் சத்தியராஜ்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story