உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை


உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 23 Aug 2019 11:45 PM GMT (Updated: 23 Aug 2019 6:55 PM GMT)

உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல் நடத்திய ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடுமலை,

புதுச்சேரி வைத்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்திமேரி (வயது 42). இவருடைய கணவர் மஞ்சினி. அங்குள்ள காப்பீடு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சாந்திமேரி திருப்பூர் மாவட்டம் உடுமலை சவுதாமலர் லே அவுட் பகுதியில் தங்கி, உடுமலை அரசு கலைக்கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கல்லூரி விடுமுறை நாட்களில் புதுச்சேரிக்கு இவர் செல்வது வழக்கம். அப்போது உடுமலையில் உள்ள வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பஸ் நிலையத்திற்கு சென்று அங்குள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்துவிட்டு பஸ்சில் புதுச்சேரிக்கு செல்வார்.

இந்த நிலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், புதுச்சேரி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் உடுமலை பஸ்நிலையத்திற்கு சாந்திமேரி புறப்பட்டுள்ளார். சவுதாமலர் லே- அவுட் பகுதியில் உள்ள நகராட்சி பூங்கா அருகே சாந்திமேரி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று சாந்தி மேரியை வழிமறித்து, தான் கையில் வைத்திருந்த மரக்கட்டையால் சாந்திமேரியின் முகத்தில் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் சாந்திமேரியின் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழும்போது அந்த ஆசாமி, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார்.

இதற்கிடையில் சாந்திமேரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து சாந்திமேரி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 341, 324, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சாந்தி மேரியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரியில் அவருக்கும் அந்த துறையின் தலைவரான, பேராசிரியர் ஒருவருக்கும் இடையே துறை சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதாகவும், இது குறித்து கல்லூரி முதல்வரிடம் சாந்திமேரி புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். உடுமலையில் கல்லூரி பேராசிரியை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் புதுச்சேரியில் இருந்து சாந்திமேரியின் கணவர் மஞ்சினி உடுமலைக்கு வந்துள்ளார்.

Next Story