ப.சிதம்பரம் கைது விவகாரம்: பாரதீய ஜனதா கட்சியின் பழிவாங்கும் போக்கினை முறியடிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்


ப.சிதம்பரம் கைது விவகாரம்: பாரதீய ஜனதா கட்சியின் பழிவாங்கும் போக்கினை முறியடிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம்
x
தினத்தந்தி 23 Aug 2019 11:45 PM GMT (Updated: 23 Aug 2019 7:43 PM GMT)

பாரதீய ஜனதா கட்சி யின் பழிவாங்கும் போக்கினை துணிவுடன் முறியடிப்போம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. ப.சிதம்பரத்தின் மீது பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்து, அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தங்களது வன்மத்தை தீர்த்துக்கொள்ள மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பு வகித்தவரை கைது செய்து ஜனநாயக மாண்புகளை சிதைத்துள்ளனர். மதவாத கும்பலை ஊக்குவித்து நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்துக்கொண்டு இருக்கும் பா.ஜனதா கட்சி, காங்கிரஸ் பேரியக்கத்திற்கு களங்கம் கற்பிக்க துடித்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் எண்ணம் என்றென்றும் ஈடேறாது.

அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள துணிவு இல்லாமல் அரசு எந்திரத்தை தங்களது சுய லாபத்துக்காக பயன்படுத்தும் இவர்களின் இந்த இழி செயல் நெடுநாள் நீடிக்காது. தேச ஒற்றுமைக்காகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவும் என்றென்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் மனதில் இருந்து எந்த சக்தியாலும் நீக்க முடியாது. பா.ஜனதா கட்சியின் சர்வாதிகார மக்கள் விரோத போக்கினை நாட்டு மக்களிடம் காங்கிரஸ் பேரியக்கம் தொடர்ந்து எடுத்துரைக்கும்.

சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மனம் தளராமல் தங்கள் லட்சிய பயணங்களை மேற்கொண்டு மதவாத சக்திகளின் பழிவாங்கும்போக்கினை துணிவுடன் முறியடிப்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Next Story