கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது


கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது
x
தினத்தந்தி 23 Aug 2019 10:31 PM GMT (Updated: 23 Aug 2019 10:31 PM GMT)

கர்ப்பமாக்கி கைவிட்ட காதலனின் வீட்டின் முன் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரை ஏமாற்றிய காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

கர்ப்பமாக்கி கைவிட்ட காதலனின் வீட்டின் முன் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரை ஏமாற்றிய காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

பச்சிளம் குழந்தை மீட்பு

பால்கர் மாவட்டம் பட்கா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் ஷிண்டே (வயது52). சம்பவத்தன்று இவரது வீட்டு திண்ணையில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று போர்வையால் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட ரமேஷ் ஷிண்டே உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அக்குழந்தையை வீட்டு திண்ணையில் விட்டு சென்ற பெண் சரிகா (23) என்பது தெரியவந்தது. சரிகாவும், ரமேஷ் ஷிண்டேவின் மகன் ராகுலும் (25) காதலித்து வந்தனர்.

இதனால் திருமணம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதற்கு பெற்றோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில், சரிகா கர்ப்பமானார். மேலும் ராகுலும் பெண்ணை கைவிட்டார். காதலனும் கைவிட்டதால் சரிகா வான்காவில் வசித்து வரும் சகோதரி வீட்டில் அடைக்கலம் புகுந்து அங்கு தங்கி வசித்து வந்தார். சரிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து பெண் குழந்தையை பெற்று எடுத்தார்.

பின்னர் பிறந்த பெண் குழந்தையை சரிகா மற்றும் அவரது சகோதரி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் ராகுலின் வீட்டு திண்ணையில் விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பெண்ணை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக ராகுல் மற்றும் குழந்தையை விட்டு சென்ற சரிகா மற்றும் அவரது சகோதரியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story