பாகூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம்


பாகூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:30 PM GMT (Updated: 24 Aug 2019 6:25 PM GMT)

மழைநீர் சேகரிப்பு குறித்து பாகூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பாகூர்,

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் ‘ஜல் சக்தி அபியான்‘ திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பது தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் சேலியமேடு பள்ளியில் நடைபெற்றது.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கரையாம்புத்தூர், மதிகிருஷ்ணாபுரம், மணமேடு, மணப்பட்டு, குடியிருப்பு பாளையம், பனித்திட்டு, கிருமாம்பாக்கம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, பாகூர் மேற்கு, பாகூர் கிழக்கு ஆகிய ஊர்களில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. நீர்நிலைகளை பாதுகாத்தல், குளங்களை தூர்வாருதல், சுத்தப்படுத்துதல், மரக்கன்று நடுதல், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீர் மேலாண்மை ஆகிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் கிராம மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத் தினர், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளிலும் நீர் சேகரிப்பு மற்றும் சிக்கனம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் தலைமையில் நடந்தது. இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு, பொது இடங் களில் மரக்கன்று நடுதல், சிறு குளங்களை தூர்வாருதல் குறித்து கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சாந்தன், மேலாளர் வீரம்மாள், முதுநிலை உதவியாளர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருபுவனை பாளையம், மதகடிப்பட்டு பாளையம் கிராமங்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து செயலாக்க அதிகாரி சீத்தாபதி தலைமை தாங்கி, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு குறித்து பேசினார்.

மேலும் ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேகரித்து பாசன வாய்க்கால்கள் வழியாக கொண்டு செல்வது, பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story