கோட்டக்குப்பம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது


கோட்டக்குப்பம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 8:10 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

கோட்டக்குப்பத்தை அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் தனிப்படை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் செந்தில்குமார், ராஜசெல்வம், ராஜேந்திரன் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 30 அட்டைப்பெட்டிகளில் 1,440 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் வேதவள்ளி தெருவை சேர்ந்த சேகர் மகன் வெங்கடேஷ் (வயது 29) என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர்.

Next Story