வேலூரில் இளநிலை அறிவியல் அலுவலர் தேர்வை 481 பேர் எழுதினர்


வேலூரில் இளநிலை அறிவியல் அலுவலர் தேர்வை 481 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 24 Aug 2019 9:30 PM GMT (Updated: 24 Aug 2019 8:19 PM GMT)

வேலூரில் 3 தேர்வு மையங்களில் நடந்த இளநிலை அறிவியல் அலுவலர் தேர்வை 481 பேர் எழுதினர்.

வேலூர், 

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் 64 இளநிலை அறிவியல் அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 709 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வேலூர் ஊரீசு பள்ளி, தோட்டப்பாளையம் பெண்கள் அரசுப்பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசுப்பள்ளி ஆகிய 3 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று 10.30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது.

விண்ணப்பித்தவர்களில் 228 பேர் தேர்வு எழுத வரவில்லை. 481 பேர் தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க மைய கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையத்தில் ஆய்வு செய்து தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா? என்பது குறித்து கண்காணித்தனர்.

தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையங்களில் குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story