கொள்ளிடம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


கொள்ளிடம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 24 Aug 2019 10:15 PM GMT (Updated: 24 Aug 2019 8:28 PM GMT)

பொறையாறு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பொறையாறு,

நாகை மாவட்டம், பொறையாறு அருகே என்.என்.சாவடி மெயின்ரோட்டை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் தீபக். ஆட்டோ டிரைவர். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா பாலையூர் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் மகள் ஜெயப்பிரியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 1¼ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

திருமணத்தின்போது 10 பவுன் நகை வரதட்சணையாக கொடுப்பதாக கூறிய பெண் வீட்டார், 8½ பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் தீபக், தனது மனைவி ஜெயப்பிரியாவிடம் மீதமுள்ள 1½ பவுன் நகையை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரியா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜெயப்பிரியாவின் தாய் மாரியம்மாள், பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளின் திருமணம் கடந்த 25.5.2018 அன்று நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 10 பவுன் நகை கேட்டனர். அதில் 8½ பவுன் நகையும், சீர்வரிசை பொருட்களும் கொடுத்தோம். பின்னர் மீதி 1½ பவுன் நகையை தருவதாக கூறியிருந்தோம். அதனை கேட்டு எனது மகளை கொடுமைப்படுத்தி உள்ளனர். எனவே, எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து எனது மகளின் கணவர் மற்றும் அவரது வீட்டார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்துபோன ஜெயப்பிரியாவுக்கு திருமணமாகி 1¼ ஆண்டே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story