திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு


திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 8:43 PM GMT)

திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள மடாவா குளத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குளத்தில் கடந்த 21-ந் தேதி நடந்த பணியின்போது முருகன், கால பைரவர் மற்றும் சித்தர் ஒருவரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த 3 சிலைகளும் கற்சிலைகளாகும்.

இந்த நிலையில் குளத்தை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று குளத்தை தூர்வாரியபோது 3 அடி உயரம் கொண்ட ஒரு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை ஆழ்வார் ஒருவருடைய சிலை என கூறப்படுகிறது. ஆனால் ஆழ்வாரின் பெயர் தெரியவில்லை.

விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் விஜயராமன், கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, கிராம உதவியாளர் சசிகலா உள்ளிட்டோர் அங்கு சென்று சிலையை கைப்பற்றினர்.

பின்னர் அந்த சிலை திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. முன்னதாக சிலையை தாசில்தார் இளமாருதி பார்வையிட்டார். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது? எந்த கோவிலுக்குரிய சிலை? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story