மனைவி, மகள் பிரிந்து சென்றதால் விரக்தி: மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை


மனைவி, மகள் பிரிந்து சென்றதால் விரக்தி: மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 4:22 PM GMT)

மனைவி, மகள் பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே வடமங்கலம் புதுநகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் சண்முகம் (வயது 36), வெல்டிங் தொழிலாளி. இவருக்கும் சென்னையை சேர்ந்த தீபா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தீபா தனது மகளுடன் சென்னைக்கு சென்றுவிட்டார். பலமுறை சென்று மனைவியை குடும்பம் நடத்த சண்முகம் அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்துவிட்டாராம். மனைவி, மகள் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த சண்முகம் மதுப் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

கடந்த 22-ந் தேதி சண்முகத்தின் பெற்றோர் வெளியூர் சென்றனர். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் சண்முகத்தின் பெற்றோர் ஊர் திரும்பினர். வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். சண்முகம் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர்.

இதுபற்றி வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், மனைவி, மகள் பிரிந்து சென்ற விரக்தியில் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story