கட்சியினரை நீக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே உண்டு திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


கட்சியினரை நீக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே உண்டு திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2019 11:15 PM GMT (Updated: 25 Aug 2019 6:42 PM GMT)

காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை நீக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு மட்டுமே உண்டு என்று புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை ஜம்மு, காஷ்மீருக்குள் நுழையவிடாமல் தடுத்தது கண்டனத்துக்குரியது. ஜம்மு, காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை இருப்பதையே இது காட்டுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளார். இரட்டை நிலைப்பாட்டில் இல்லை.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது. ப.சிதம்பரம் கைதுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உணர்வு பூர்வமாக ஜனநாயக முறைப்படி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் எண்ணிக்கையை பார்க்காமல் உணர்வுகளை பார்க்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு பா.ஜனதா கைது நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் செய்ததை வைத்து பார்க்கும்போது, அவர் பட்ஜெட் தாக்கல் செய்ததில் தவறு உள்ளதை உணர்த்துகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பா.ஜனதா அரசின் திட்டங்களை ஆதரிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறி உள்ளது தற்போது உள்ள சூழலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியை கெடுக்க நினைப்பதால் ஏற்பட்ட ஆதங்கமே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தொண்டர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காகவே அவர் இதுபோன்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை நீக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு மட்டுமே உண்டு.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் முயற்சி கண்டனத்துக்குரியது. மேலும் அரசு துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருவது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியின் செயல்பாட்டில் எந்த விதமான குறை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story