மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்கள் உணர வேண்டும் ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளர் பேச்சு


மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்கள் உணர வேண்டும் ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 7:08 PM GMT)

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்கள் உணர வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளர் சஞ்சீவ்பட்ஜோஷி கூறினார்.

சீர்காழி,

சீர்காழி அருகே திருபுங்கூரில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்(நீர் மேலாண்மை திட்டம்) கீழ் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாராணி, பொறியாளர்கள் முத்துக்குமார், தாரா, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜமாணிக்கம், போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சாமிதாஸ் வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட இயக்குனர் தியாகராஜன், மத்திய நீர்வள திட்ட துணை இயக்குனர் கிரிதரன், பாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். மத்திய நீர் மேலாண்மை திட்ட கண்காணிப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளருமான சஞ்சீவ்பட்ஜோஷி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்கள் உணர வேண்டும். தங்கள் பகுதிகளில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சேகரிக்க வேண்டும். மேலும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். மரங்கள் நடுவதன் மூலம் மழையை பெறமுடியும். மழைநீரை சேகரிக்க அரசிடம் தாராளமாக பணம் உள்ளது. இதனை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அக்டோபர் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் மீண்டும் நான் இங்கு வந்து கலந்து கொள்வேன். அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் மழைநீர் சேகரிப்பு குறித்து செய்த பணிகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்த்தில், மழைநீரை சேகரிப்பது, நீர்நிலைகளை தூர்வாருவது, பன்னைகுட்டைகள் அமைத்தல், மரங்களை வளர்த்து பராமரித்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அ.தி.மு.க மாவட்ட பொருளாளர் எல்லையன், முன்னாள் எம்.எல்.ஏ. பூராசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகரன், ஒன்றிய துணை செயலாளர் ரவிசந்திரன், ஊராட்சி கழக செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைப்போல கதிராமங்களம், திட்டை, விளந்திடசமுத்திரம், அகனி உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. 

Next Story