அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 7:51 PM GMT)

அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் கலெக்டர் டி.ஜி.வினய் அறிவுறுத்தல்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நீர்மேலாண்மை இயக்கம், பாதுகாப்பு என்ற திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சாத்தமங்கலம் கிராமத்தில் நடந்த நீர்மேலாண்மை இயக்கம், பாதுகாப்பு திட்டம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் வினய் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ஊரக பகுதிகளில் ஊராட்சிகள் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊரணிகள் போன்ற நீர் நிலைகளில் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு அதனை தூர் வாரி புனரமைக்கும் பணிகளும், பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பில் 12 ஏரிகள் மற்றும் வரத்து வாய்கால்களை தமிழக முதல்- அமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளின் கீழ் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்து மழைநீர் சேகரிக்க வேண்டும் என்றார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story