வெளிமாநிலங்களில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் எந்த அடிப்படையில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி


வெளிமாநிலங்களில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் எந்த அடிப்படையில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 26 Aug 2019 10:45 PM GMT (Updated: 26 Aug 2019 7:31 PM GMT)

வெளிமாநிலங்களில் படித்து தமிழக மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு எந்த அடிப்படையில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்ட பலர், மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி வெளியிடப்பட்டது. 8-ந்தேதி எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 15-ந்தேதி தனியார் சுய நிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

இதில் தனியார் மருத்துவ சுயநிதி கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.

இதனால் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு இவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள். மேலும் இந்த ஆண்டு மாநில இட ஒதுக்கீட்டின்கீழ் வெளிமாநிலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். வெளிமாநில மாணவர்களை நீக்கிவிட்டு, புதிதாக பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வெளிமாநிலத்தில் வசிக்கும் பல்வேறு நபர்கள், தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளிமாநில மாணவர்கள் என்று கூறப்படும் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மருத்துவ கலந்தாய்வு பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் உரிய பரிசீலனைக்கு பின்னரே கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இந்த விஷயத்தில் முழு விவரங்களையும் இந்த கோர்ட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறது. அதன் அடிப்படையில் தான் வெளிமாநில மாணவர்கள் என அறியப்பட்ட 126 பேரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று பள்ளிப்படிப்பை முடித்த பலரும், தமிழக ஒதுக்கீட்டின்கீழ் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.

அவர்களில் பலர் வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். பலர் இரட்டை இருப்பிட சான்றுகளை வைத்துள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது” என கேள்வி எழுப்பினார்.

பின்னர், “இதுபற்றி 126 மாணவர்களும் உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story