திருவள்ளூர் மாவட்டத்தில் குடோனில் பதுக்கிய ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல் 3 பேர் கைது


திருவள்ளூர் மாவட்டத்தில் குடோனில் பதுக்கிய ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 10:16 PM GMT (Updated: 26 Aug 2019 10:16 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் செந்தில்குமார் (வயது 34) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களை கிடங்கில் பதுக்கி வைத்து சென்னை, பெங்களூரு, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்றுவருவதாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு மற்றும் போலீசாருடன் நேற்று மளிகை கடை மற்றும் கடைக்கு பின்புறத்தில் உள்ள குடோனில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெட்டி பெட்டியாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனையடுத்து காஞ்சீபுரம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பல கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே உள்ள பலசரக்குக்கடை மற்றும் என்.எம்.எஸ்.நகரில் உள்ள அந்த கடைக்கான குடோன் ஆகியவற்றில் சோதனை செய்தனர். மேற்கண்ட 2 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலசரக்கு கடை உரிமையாளரான அரிகேசவன் (58) மற்றும் ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டையைச்சேர்ந்த மாலியாத்ரி (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story