திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் கலெக்டர் அறிவிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2019 10:00 PM GMT (Updated: 27 Aug 2019 6:32 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை உள்ளது. நீர் நிலைகளான கடல், ஆறு மற்றும் குளம் ஆகியவை குடிநீர் ஆதாரத்தை தருகின்றது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்த வித ரசாயன கலவையற்றதுமான சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்கவேண்டும்.

காக்களூர் ஏரி, மப்பேடு (ஈசா ஏரி), கோலப்பஞ்சேரி ஏரி, ஊத்துக்கோட்டை குளம், ஊத்துக்கோட்டை சித்தேரி, ஊத்துக்கோட்டை கொசஸ்தலை ஆறு, திருத்தணி காந்தி ரோடு குளம், ஆர்.கே.பேட்டை வண்ணாண்குளம், பள்ளிப்பட்டு கரிம்பேடு குளம், பொதட்டூர்பேட்டை பாண்டரவேடு ஏரி, கனகம்மாசத்திரம் குளம், கும்மிடிப்பூண்டி ஏழுகண் பாலம், பக்கிங்காம் கால்வாய், திருப்பாலைவனம், பழவேற்காடு கடற்கரை, சீமாவரம் கொசஸ்தலை ஆறு போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story