குருவாடி வண்ணான் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


குருவாடி வண்ணான் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 27 Aug 2019 11:00 PM GMT (Updated: 27 Aug 2019 6:57 PM GMT)

குருவாடியில் உள்ள வண்ணான் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவாடி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்ணான் ஏரி இருந்தது. அந்த ஏரி காலப்போக்கில் அந்த கிராமத்தை சேர்ந்த 51 நபர்களால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் அந்த வண்ணான் ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியாக மீண்டும் மாற்றி தர வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவின் பேரில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குருவாடி கிராமத்திற்கு சென்று நில அளவைகளை வைத்து அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை சுற்றி கரை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது அந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் மற்றும் அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து இந்த ஏரியின் ஆக்கிரமிப்பை நீக்கினால் மட்டும் போதாது எங்கள் கிராமத்தில் இதேபோன்று வரத்து ஏரி என்ற ஒரு ஏரியும் ஆக்கிரமிப்பில் உள்ளது அதில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வண்ணான் ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் குருவாடி கிராமத்தில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் அந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வரத்து ஏரியின் ஆக்கிரமிப்பை நீக்குவது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விவாதித்து இன்னும் சில தினங்களில் வரத்து ஏரியின் ஆக்கிரமிப்பையும் நீக்கி தருகிறோம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தற்போது போலீஸ் பாதுகாப்புடன் வண்ணான் ஏரியின் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு ஏரியின் கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், தூத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story