மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா


மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 27 Aug 2019 10:45 PM GMT (Updated: 27 Aug 2019 8:06 PM GMT)

மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு சேதுரத்தினபுரம் பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதன்காரணமாக குடிக்க கூட தண்ணீர் இன்றி தண்ணீரை தேடி இரவும், பகலும் அலைய வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். கடும் அவதிக்கு ஆளான பொது மக்கள் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்கள் தர்ணா

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன் சுட்டெரிக்கும் வெயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். மோசமான சாலையால் தினமும் விபத்தில் சிக்கி பலரும் பாதிக்கப்படும் நிலையை தவிர்க்க, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசாரும், நகராட்சி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story