தூத்துக்குடியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்


தூத்துக்குடியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:45 PM GMT (Updated: 27 Aug 2019 8:28 PM GMT)

தூத்துக்குடியில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவருடைய மகன் சரவணன் என்ற சிந்தா சரவணன் (வயது 36). இவர் தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

பிரபல ரவுடியான இவர் மீது, தூத்துக்குடி தாளமுத்துநகர், வடபாகம், சாயல்குடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சரவணன் மீது பிரபல ரவுடியான பட்டு என்ற பட்டுராஜை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் சரவணனை தாளமுத்துநகர் போலீசார் குற்றவாளிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சரவணன் நேற்று மாலை தனது வீட்டில் இருந்தார். அப்போது சுமார் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தது. அவர்களை பார்த்ததும் சரவணன் அதிர்ச்சி அடைந்தார். சுதாரிப்பதற்குள் மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சரவணன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் வீட்டிற்கு ஓடிவந்தனர். சரவணன் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த பயங்கர கொலை குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொலை நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் சரவணன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கன்னிராஜபுரத்தில் நடந்த பட்டுராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக சரவணன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணனை வெட்டிக்கொன்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

தூத்துக்குடியில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story