மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் - நோயாளிகள் அவதி


மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் - நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 27 Aug 2019 10:15 PM GMT (Updated: 27 Aug 2019 8:48 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

விழுப்புரம்,

அரசாணை 354-ன்படி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு அவர்கள் படிப்பு முடித்ததும் அந்தந்த கல்லூரிகள் அருகிலேயே பணி வழங்க வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 24-ந் தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இருந்தபோதிலும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் ஒருநாள் மட்டும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள், கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், மரக்காணம், வானூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் 172 பேரில் 137 பேர் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் பணியில் இல்லாமல் அந்த பிரிவு செயல்படவில்லை. இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் மிகவும் அவதியடைந்தனர். அதேநேரத்தில் 35 டாக்டர்கள் மட்டும் நேற்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணியில் ஈடுபட்டனர். இவர்கள், அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவில் பணியில் இருந்து அங்குள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்தனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருண்சுந்தர் தலைமை தாங்கினார்.

இதில் 30-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

Next Story