சிதம்பரத்தில் ரவுடி கொலை வழக்கில், போலீசாரால் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு


சிதம்பரத்தில் ரவுடி கொலை வழக்கில், போலீசாரால் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு
x
தினத்தந்தி 28 Aug 2019 11:00 PM GMT (Updated: 28 Aug 2019 8:20 PM GMT)

சிதம்பரத்தில் ரவுடி கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை போலீசார் நேற்று செயலிழக்க செய்தனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேட்டை சேர்ந்தவர் ரவுடி கோழி பாண்டியன்(வயது 35). கடந்த 20-ந்தேதி இரவு இவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது வெடிகுண்டு வீசினர். இதில் ஒரு குண்டு வெடித்ததில் கோழிபாண்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மீது வீசப்பட்ட ஒரு வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்தது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவேட்குளத்தை சேர்ந்த மணி, ஜெயசீலன், ராஜா மற்றும் மஞ்சுளா, சரத் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே சம்பத்தன்று கோழி பாண்டியன் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளில் வெடிக்காமல் கிடந்த ஒரு வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில், சிதம்பரத்தை அடுத்த எம்.கே. தோட்டத்தில் வயல்வெளி பகுதியில் அந்த வெடிகுண்டை நேற்று காலை போலீசார் செயலிழக்கம் செய்தனர். இதற்காக சென்னையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் சிதம்பரத்திற்கு வந்திருந்தனர்.

அவர்கள் டெட்டனேட்டர் மூலம் அந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்கவைத்து செயலிழக்க செய்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதற்கிடையே அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story