வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 29 Aug 2019 10:45 PM GMT (Updated: 29 Aug 2019 6:40 PM GMT)

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி திகழ்கிறது. கீழை நாடுகளில் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அன்னை மரியாவின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்ககூடிய பசிலிக்கா என்ற பெருமை மிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்றாகும்.

புயலில் சிக்கிய போர்த்துக்கீசியர்களை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரைசேர்த்த அன்னை மரியாவிற்கு நன்றிக்கடனாக கட்டப்பட்ட ஆலயமாக இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் வங்க கடல் அமைந்திருப்பது ஆலயத்துக்கு மேலும் அழகூட்டும் காட்சி ஆகும்.

கொடியேற்றத்துடன் தொடங்கியது

துன்பத்தில் துவண்டு அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை சாந்தப்படுத்தி புது வாழ்வுக்கு வழி காட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்தநாள் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னை ஆரோக்கிய மாதாவின் தேர் பவனி நடந்தது. அப்போது பெண்கள் தேரை தூக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதைத்தொடர்ந்து மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேவாலய வளாகம், கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயம் அருகில் உள்ள கொடி கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது.

வாணவேடிக்கை

பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடி கம்பத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்தார். அதனைத்தொடர்ந்து 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பேராலயத்தில் அமைக்கப் பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் எரிய விடப்பட்டன.

அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து “மரியே வாழ்க“ என கோஷங்கள் எழுப்பினர். வண்ண பலூன்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை நடந்தது. விழாவில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

சிறப்பு திருப்பலிகள்

அதனை தொடர்ந்து பேராலயத்தில் தமிழ் திருப்பலியும், அன்னையின் திருச்சுரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து விண்மீன் ஆலயம், பேராலய கீழ்க்கோவில், மேல்கோவில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. திருவிழா நாட்களில் பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகிறது.

மேலும் சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் பகல் 12 மணிக்கு கொடியேற்றுதலும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பில் இருந்து தேர்பவனியும் நடக்கிறது.

பெரிய தேர்பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீரும், தமிழில் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது.

பங்கு தந்தையர்கள்

விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜசேகரன் (நாகை), துரை(திருவாரூர்), சீனிவாசன்(அரியலூர்), பேராலய அதிபர் பிரபாகர், உதவி அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குதந்தையர்கள் ஆண்டோ ஜேசுராஜ், டேவிட் தன்ராஜ் மற்றும் அருட்சகோதரிகள், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், ஜூலியட் அற்புதராஜ், கிங்ஸ்லி ஜெரால்டு மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு தலைமையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள் அடங்கிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பேட்டி

விழா தொடர்பாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அன்னையின் ஆண்டு திருவிழா இன்று(அதாவது நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ந் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவை காண தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாதி, மதம், இனம், மொழி பாகுபாடின்றி அன்னையின் பக்தர்களாக ஒன்று கூடி அனைவரும் திருப்பயணிகளாக வேளாங்கண்ணிக்கு வருகின்றனர்.

இந்த திருப்பயணத்தின் நோக்கம், நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் உலகிலே எந்த மனிதரும் நிலையாக வாழ்வது இல்லை. நிலையற்ற வாழ்விலே நிலையான ஆண்டவனை தேடிக்கொள்வதுதான் திருப்பயணத்தின் நோக்கம் ஆகும். திருப்பயணத்தில் இதய தூய்மையோடு வர வேண்டும். திருவிழாவிற்கு வருகின்ற அனைவருக்கும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இவை அனைத்தும் முறையாக பயன்பெற்று அன்னையின் ஆசி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story